நாமக்கல் தனியார் கல்லூரியில் உணவு பிரச்சினையால் மாணவர்கள் சிலர் பலியானதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலான நிலையில், தவறான தகவல் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாமக்கல் மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து காவல் துறை மேலும் தெரிவித்து உள்ளதாவது:      

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

Continues below advertisement

இந்த நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புற நோயாளிகளாக (OP) சிகிச்சை பெற்றனர். அவர்களின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து, அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.

சமூகத்தில் பதற்றத்தையும் சட்ட ஒழுங்கு மீறலையும் ஏற்படுத்துவதா?

மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு மீறலையும் ஏற்படுத்தினர். குறிப்பாக, "Pokkiri_Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற நபர்கள், எக்ஸ் வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு நாமக்கல் காவல் துறை தெரிவித்துள்ளது.