தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்க இ-மெயில் முகவரி, அஞ்சல் முகவரி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.


மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. மாநிலத்துக்கென தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்களைக்‌ கொண்ட உயர்மட்டக்‌ குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும்‌” என அறிவிக்கப்பட்டிருந்தது.


அந்த அறிவிப்பைச்‌ செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில்‌ புதிய கல்விக்‌ கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, பின்வரும் குழுவினை அமைத்து, முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்தார்.




அதன்படி குழுவின்‌ தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற மேனாள்‌ தலைமை நீதிபதி த.முருகேசன்‌  நியமிக்கப்பட்டார். இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது‌.



இந்நிலையில் இதுகுறித்து மாநிலக்‌ கல்விக் கொள்கையின் உயர்மட்டக்‌ குழு உறுப்பினர்‌ செயலர் தெரிவித்துள்ளதாவது:


தமிழ்நாட்டில்‌ மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன்‌ தலைமையில்‌ ஓர்‌ உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால்‌ அமைக்கப்பட்டுள்ளது. 


மேற்படி தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளும்‌ பொருட்டு அனைத்து தரப்பினரிடமிருந்து கருத்துக்கள்‌ / ஆலோசனைகள்‌ பெற்றிட உயர்மட்டக்‌ குழுவால்‌ முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதனடிப்படையில்‌ பொதுமக்கள்‌ / கல்வியாளர்கள்‌ / தன்னார்வலர்கள்‌ / தொண்டு நிறுவனங்கள்‌/ ஆசிரியர்கள்‌ / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்‌/ மாணவர்கள்‌ / பெற்றோர்கள்‌ / தனியார்‌ கல்வி நிறுவனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வரவேற்கப்படுகின்றன. மேற்படி கருத்துருக்கள்‌ / ஆலோசனைகளை 15.09.2022க்குள்‌ கீழ்க்கண்ட மின்னஞ்சல்‌ அல்லது அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இதன்‌ மூலம்‌ அறிவிக்கப்படுகிறது.


மேலும்‌ உயர்மட்டக்குழு இணைப்பில்‌ கண்டுள்ள மாவட்டங்களில்‌ கருத்துக் கேட்புக்‌ கூட்டங்கள்‌ நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


மின்னஞ்சல்‌ முகவரி: stateeducationpolicy@ gmail.com
அலுவலக முகவரி : Centre for Excellence Building- 3வது தளம்‌, களஞ்சியம்‌ கட்டிடம்‌ பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம்‌, சென்னை - 600025.

இவ்வாறு மாநிலக்‌ கல்விக் கொள்கையின் உயர்மட்டக்‌ குழு உறுப்பினர்‌ செயலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண