தொடக்கக் கல்வி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பணிக்கு வருகைபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான விவரங்களையும் அவர் கோரியுள்ளார். விடுமுறை எடுக்க அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
’’தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கு 24.12.2025 முதல் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 05.01.2026 அன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டு, அப்பாடப் புத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்ளுவதற்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் மற்றும் ஒழுக்கம் குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
No work No pay
எனவே, பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் /ஆசிரியர்களுக்கு "No work No pay" அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வருகை புரியாமல் உள்ள ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் வர இயலாதவர்களை தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக்கூடாது.
விவரம் சேகரிக்க உத்தரவு
அத்துடன் பணிக்கு வருகைபுரியாத காலத்தினை ஊதியமில்லா விடுப்பாக அனுமதித்து, அவர்களின் வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) உறுதி செய்ய வேண்டும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனால் 05.01.2026 தேதி முதல் (தேதி வாரியாக) போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விபரங்களை தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.