மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ பல்வேறு போட்டித்‌ தேர்வுகள்‌ எழுத மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அளவிலேயே முன்‌ அனுமதி வழங்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. 


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்‌ கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு நிர்வாக மறு கட்டமைப்பு குறித்தும்‌ திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌ குறித்தும்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.


இந்நிலையில்‌ அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மற்றும்‌ இதர தேர்வாணையங்கள்‌ நடத்தும்‌ பல்வேறு பதவிகளுக்கான போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்துகொள்ள முன்‌ அனுமதி கோரும்போது முதன்மைக்‌ கல்வி அலுவலகங்களில்‌ இருந்து பள்ளிக்‌ கல்வி ஆணையரகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதில்‌ காலதாமதம்‌ ஏற்படுவது கவனத்திற்கு தெரிய வருகிறது.


அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மற்றும்‌ இதர தேர்வாணையங்கள்‌ நடத்தும்‌ பல்வேறு பதவிகளுக்கான போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்துகொள்ள உரிய கால அவகாசத்திற்குள்‌ அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அளவிலேயே உரிய முன்‌ அனுமதி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


இந்த உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்‌ கல்வி ஆணையர் பிறப்பித்துள்ளார். 


*


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள்  ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.


பயிற்சித் தேர்வு


மேற்படி கணினி வழித்‌ தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வை மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்ளலாம். இதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்‌. அனைத்து தேர்வர்களும்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்‌. 


தேர்வுக் கால அட்டவணை எப்போது?


ஜனவரி மூன்றாம்‌ வாரத்தில்‌ தேர்வு கால அட்டவணை மற்றும்‌ அனுமதிச் சீட்டு‌ வழங்கும்‌ விவரம் அறிவிக்கப்படும்‌. இந்தத் தகவல்களை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.