பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும், காலத்துக்கு ஏற்ற புதிய பாடங்களைச் சேர்ப்பது குறித்தும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று (21.07.2026) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் நாராயணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றன. 

Continues below advertisement

கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய விவரங்கள்

தற்போதைய காலச் சூழலுக்குப் பொருந்தாத சில பழைய பாடப்பகுதிகளை முழுமையாக நீக்கிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயனுள்ள வகையிலான புதிய பாடங்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல 6 முதல் 10ஆம் வகுப்பு வரையான பாடத்திட்ட வரைவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. 

நவீன தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டத்தின் வடிவமைப்பு அமைய உள்ளது. குறிப்பாக ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை குறித்த அறிமுகம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில், மாநிலப் பாடத்திட்டத்தை விரிவுபடுத்த வல்லுநர் குழு ஆலோசிக்க உள்ளது.

பாடங்களில் செய்யப்பட உள்ள திருத்தங்கள் மட்டுமின்றி, புதிய வடிவமைப்புடன் அச்சிடப்பட உள்ள பாடப்புத்தகங்களின் அச்சுச் செலவினங்கள் மற்றும் அவற்றின் விலை நிர்ணயம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் பாடங்கள் நீக்கம்?

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பாடப்புத்தகங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் குறித்த பாடப்பகுதிகள் இந்த புதிய திருத்தத்தில் நீக்கப்படுமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எப்போது சேர்க்கப்பட்டது?

திமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு புத்தகத்தில், செம்மொழி நிலை, தமிழ்மொழிக்குக் கிடைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த பாடம் சேர்க்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இந்த பாடம் சேர்க்கப்பட்டு, வழங்கப்பட்டது. தொடர்ந்து 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டது. 

தொடர்ந்து 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில், குடிமையியல் பாடத்தில் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது