விழுப்புரம்: சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணபிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2025-2026) தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ /மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

Continues below advertisement

பட்டப் படிப்பில் 60% பெற்றிருக்க வேண்டும்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய  (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை

பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல். மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம். நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம்

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.