தனியார் பள்ளிக்கு நிகராக மாறும் அரசுப் பள்ளி ! ஓய்வுக்கு முன் ரூ.2 லட்சத்தில் பெஞ்ச் வாங்கி அசத்திய தலைமை ஆசிரியை
தனது நீண்டகாலப் பணி நிறைவடையும் தருவாயில், பள்ளிக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியை விரும்பியுள்ளார்.

விழுப்புரம்: தனியார் பள்ளிக்கு நிகராக மாறும் அரசுப் பள்ளி: ஓய்வு பெறும் முன் ரூ. 2 லட்சத்தில் பெஞ்சுகள் வாங்கித் தந்த தலைமை ஆசிரியை செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிக்கு நிகராக மாறும் அரசுப் பள்ளி
விழுப்புரம் மாவட்டம், மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர், தனது பணி ஓய்வுக்கு முன்பாக, பள்ளி மாணவர்களின் நலனுக்காக தனது பேத்தியுடன் இணைந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பெஞ்சுகளை (இருக்கைகளை) வாங்கிக் கொடுத்துள்ள செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அரசி. இவர் வரும் மே மாதம் பணி ஓய்வு பெற உள்ளார். தனது நீண்டகாலப் பணி நிறைவடையும் தருவாயில், பள்ளிக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார்.

குறிப்பாக, மழைக்காலங்களில் பள்ளியின் சிமெண்ட் தரை அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால், தரையில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை அவர் கவனித்துள்ளார். இதற்குத் தீர்வு காணும் வகையில், மாணவர்களுக்கு இருக்கைகள் வாங்கித் தர வேண்டும் எனத் தனது பேத்தி சஹானாவிடம் தெரிவித்துள்ளார்.
தனது பாட்டியின் உன்னத நோக்கத்தைப் புரிந்துகொண்ட பேத்தி சஹானா, தனது நண்பர்களுடன் இணைந்து ரூ. 1 லட்சம் திரட்டியுள்ளார். தலைமை ஆசிரியை அரசி தனது பங்காக ரூ. 1 லட்சத்தைச் செலுத்த, மொத்தம் ரூ. 2 லட்சம் செலவில் 60 மாணவர்கள் அமரக்கூடிய 30 புதிய பெஞ்சுகள் வாங்கப்பட்டு, பள்ளிக்கு வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியரின் இந்தச் சீரிய முயற்சியால், தற்போது அந்த அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வசதியான பெஞ்சுகளில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் உடல்நலக்குறைவு காரணமாக மாணவர்கள் விடுப்பு எடுப்பது குறைந்துள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

25 ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு, தனது ஓய்வுக்கு முன்பாக ஒரு நிரந்தரத் தீர்வைக் கொடுத்துச் செல்லும் தலைமை ஆசிரியை அரசி அவர்களின் சேவையையும், அவருக்கு உறுதுணையாக நின்ற அவரது பேத்தி சஹானாவின் செயலையும் அப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.





















