கல்வியாளரும் முனைவருமான எஸ்.எஸ். ராஜகோபாலன் கோடம்பாக்கம் ரயிலடி அருகே உள்ள ஜெவி மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 3ஆம் தேதி) இரவு 11.55 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடுக்கப்படுகிறது.
யார் இந்த ராஜகோபாலன்?
தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவரும், பள்ளிக் கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர் இராஜகோபாலன்.
சென்னை மாகாணப் பள்ளி
சென்னை மாகாணத்தில் முதல்முறையாக 1922ஆம் ஆண்டில் சென்னை விக்டோரியா போர்டு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியைத் தொடங்கியவர் ராஜகோபாலன். பள்ளி நிர்வாகத்தின் தயக்கத்தைப் போக்கி சிறுமிகளை பள்ளியில் சேர்த்தவர் இவர். பள்ளி ஆசிரியராகவும், அதிகாரியாகவும் பணியாற்றிய அவர், ஆட்சியாளர்களுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர்.
கல்வி என்பது வியாபாரம் இல்லை
"கல்வி என்பது வியாபாரம் அல்ல, அது சமூகத்திற்கான சேவை" என்ற உன்னதக் கொள்கையைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர்.
கோயம்புத்தூரில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியது முதல், சென்னையில் கல்விச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தது வரை, மாணவர்களின் உரிமைக்காகவும் கல்வித் தரத்திற்காகவும் அவர் ஓயாமல் குரல் கொடுத்தார். குறிப்பாக, ஆர்டிஇ (RTE) எனப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அவரது சிந்தனைகளும் சமூகப் பணிகளும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், கல்வி உலகிற்கும் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் அன்பில் புகழஞ்சலி
மூத்த கல்வியாளர் முனைவர் ராசகோபாலன் மறைவு கல்வித் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். முத்தமிழறிஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சமச்சீர்க் கல்வி குழுவின் உறுப்பினராகவும் திகழ்ந்தவர்.
“தேர்வு என்பது கற்றலை மட்டுமே மதிப்பிடுவது இல்லை. கற்பித்தலையும் மதிப்பிடுவது” என்பதை வலியுறுத்தியவர் ச.சீ.இரா. முன்னோடித் திட்டங்களுக்கு வழிகாட்டும் அதே வேளையில் விமர்சிக்கவும் தயங்காத மாணவர்களின் நலன் விரும்பிக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம்.
