ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.


நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் கல்வித் துறை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சில உதவித் தொகைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவகிறது. 


இந்த நிலையில்,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஆதி திராவிடர்‌ மற்றும் பழங்குடியினர்‌ நலத்துறை அரசு செயலாளர்‌ கூறி உள்ளதாவது:


’’ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ போஸ்ட் மெட்ரிக்‌ கல்வி உதவித்‌ தொகை திட்டங்களுக்கான இணையதளம்‌ கடந்த ஜனவரி 30ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. இத்திட்டங்களின்‌ கீழ்‌ பயன்பெற தகுதி வாய்ந்த ஆதி திராவிடர்‌ மற்றும்‌ கிறித்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிடர்‌ இன மாணாக்கர்களிடம் இருந்து (கல்லூரியில்‌ பயில்பவர்கள்‌ மட்டும்‌) புதிய மற்றும்‌ புதுப்பித்தல்‌ இனங்களுக்கான கல்வி உதவித்‌ தொகை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. ‌


2022- 2023ஆம் கல்வியாண்டு முதல்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ்‌ கல்வி உதவித்தொகை பெற்ற மாணாக்கர்களே இணையவழியில்‌ விண்ணப்‌பிக்க வேண்டும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?


* ஆதார்‌ எண், 
* ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்‌, 
* ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட வங்கிக்‌ கணக்கு எண்‌, 
* இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று 
* சாதி சான்று 


உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன்‌  https://tnadtwscholarship.tn.gov.in/. என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. மேலும்‌ மாணவர்கள்‌ சிரமமின்றி இந்த இணைய தளத்தில்‌ விண்ணப்பிக்க ஏதுவாக மாணவர்கள்‌ கல்வி பயிலும்‌ கல்லூரிகள்‌ மூலம்‌ அக்கல்லூரியின்‌ பற்று அலுவலர்கள் (Nodal Officer) முன்னிலையில்‌ விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களில்‌ ஏற்படும்‌ சந்தேகங்கள்‌ குறித்த விவரங்கள் அறிய விண்ணப்பம்‌ பதிவிடும்‌ நடைமுறை குறித்த குறும்‌ படம்‌ மற்றும்‌ மாவட்ட அளவில் உதவி பெற அணுக வேண்டிய அலுவலர்கள்‌ குறித்த விஷம்‌ கல்வி‌ உதவித்தொகை இணைய தளத்தில்‌ பதிவிடப்பட்டுள்ளது. 
போதுமான கால அவகாசம்‌


மேலும் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம்‌ வழங்கப்படும் எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. ஆகவே மாணவர்‌ அனைவரும்‌ உடனடியாக விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது’’.


இவ்வாறு  ஆதி திராவிடர்‌ மற்றும் பழங்குடியினர்‌ நலத்துறை அரசு செயலாளர்‌ தெரிவித்துள்ளார். 


கூடுதல் தகவல்களுக்கு:  https://tnadtwscholarship.tn.gov.in/