YASASVI எனப்படும் இந்தியாவின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகையை வழங்கும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


இந்தியாவின்‌ இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர்‌ கல்வி உதவித்‌ தொகை திட்டம் தகுதித்‌ தேர்வு செப்டம்பர் 29 அன்று நடைபெற உள்ளது. குறிப்பாக 2.5 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெற உள்ளது. கணினி வழியில் நடைபெறும் இந்தத் தேர்வுக்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. 


இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மாணவர்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 


இது 9 வது வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கான உதவித்‌ தொகை திட்டம்‌ ஆகும்‌. இந்த மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. வருமானச் சான்றிதழை மாணவர் சேர்க்கையின்போது பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 


என்ன தகுதி?


இந்தத் திட்டத்தில் இதர பிற்பட்டோர் (OBC), பொருளாதார ரீதியாக பிற்பட்டோர்‌ (EBC), சீர்‌ மரபினர்‌ (DNT) ஆகிய மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டு தேர்வை எழுத முடியும். எனினும் தேவையான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்தமாக 30 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 3,093 மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 4,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். 


தேர்வு முறை


கணிதத்தில் இருந்து 30 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல அறிவியலில் இருந்து 20 கேள்விகளுக்கு 80 மதிப்பெண்களும் சமூக அறிவியலில் இருந்து 25 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும் வழங்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 5 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆக மொத்தத்தில் 100 கேள்விகளுக்கு 400 மதிப்பெண்கள் கேட்கப்படும். தேர்வுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் எதுவும் இல்லை. தேர்வு கணினி வழியில் 2.5 மணி நேரம் நடைபெறும். 


தேர்வு மொழி


இந்த தேர்வுக்கான கேள்வித்‌ தாள்கள் இந்தியிலும்‌, ஆங்கிலத்திலும்‌ மட்டுமே கேட்கப்படும். ஆஃப்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும். 


9ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 8ஆம் வகுப்புப் பாடத் திட்டமும், 11ஆம் வகுப்பில் சேர, என்சிஇஆர்டி 10ஆம் வகுப்புப் பாடத் திட்டமும் கணக்கில் கொள்ளப்பட்டு, கேள்விகள் கேட்கப்படும். 


தேர்வு மையங்கள்


தமிழ்நாட்டில் சென்னை, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 


கூடுதல் தகவல்களுக்கு: 011 4075 9000 மற்றும் 011 6922 7700
இ-மெயில் முகவரி: yet@nta.ac.in


பள்ளிகளின் விவரத்தை அறிய: https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


தேர்வு குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள https://yet.nta.ac.in/frontend/web/faq/index என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


தேர்வு பற்றிய முழுமையாக கையேட்டுக்கு.. https://yet.nta.ac.in/uploads/public-notice-inviting-online-application.pdf  என்ற முகவரியை க்ளிக் செய்து பார்க்கலாம்.