வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டமளிப்பு உரையைத் தொடங்கிப் பேசினார் பிரதமர் மோடி.

Continues below advertisement

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

Continues below advertisement

’’வணக்கம் எனது மாணவ குடும்பமே… மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமைகொள்கிறேன். பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. 

புதியதோர் உலகம் செய்வோம் என்றார் பாரதிதாசன். நாம் கற்ற கல்வியும் அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு உதவ வேண்டும்’’. 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, ’’எனது மாணவ குடும்பமே..’’ என்று பேச்சினூடே 9 முறை தமிழில் பிரதமர் மோடி பேசியது கவனத்தை ஈர்த்தது. 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’திராவிடக் கொள்கைகளை தமிழகத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்தப் பட்டியல் எடுத்தாலும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு அதில் இடம் இருக்கும். மாணவர்களுக்கு அனைவருக்கும் பள்ளிக் கல்வி, கல்லூரி, ஆராய்ச்சிக் கல்வியை வழங்குகிறது நம் திராவிட மாடல் அரசு. பல்கலைக்கழகங்கள் சமூக நீதியையும் புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும்.

 தமிழ்நாட்டு மாணவர்களை - படிப்பிலும்‌, வாழ்க்கையிலும்‌ வெற்றியாளராக்குவதற்கு "நான்‌ முதல்வன்‌" திட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மாணவர்களின்‌ சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, "CM Research Grant Scheme", உயர்கல்வி மாணவர்களின்‌ சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, "CM Fellowship Program" ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது.

*  பெண் கல்வியை ஊக்குவிக்கும்‌ பொருட்டு "மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌" எனும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அரசுப்‌ பள்ளியில்‌ படித்து, கல்லூரிக்குள்‌ நுழையும்‌ 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம்‌ தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்படுகிறது.

* தமிழ்நாடு மாணவர்கள்‌ போட்டித்‌ தேர்வுகள்‌, ஆட்சிப்‌ பணித்‌ தேர்வுகள்‌, திறன்சார்ந்த தேர்வுகளுக்கு தயார்‌ செய்யும்பொருட்டு மதுரையில்‌ கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நூலகம்‌ அமைக்கப்பட்டிருக்கிறது’’என்று கூறி இருந்தார். 

தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சென்றனர்.