அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளதாவது:-

மருத்துவமும் உயர் கல்வியும் தனது இரு கண்களாகக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர்.

Continues below advertisement

உயர்கல்வியில் தமது மாணாக்கர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க நமது மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்பதற்காக மாணாக்கர்கள் நாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வராக திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கில், ’நான் முதல்வன்’ என்ற முத்தான திட்டத்தை வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறார்.

அதேபோல, உயர்கல்வி பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் சுய மரியாதையுடன் உயர் கல்வி பயிலவும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார் நமது முதலமைச்சர் ஸ்டாலின்.

37 புதிய அரசுக் கல்லூரிகள்

கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியதுடன் இதில் இந்த கல்வி ஆண்டு மட்டும் பதினாறு புதிய கல்லூரிகளை அறிவித்து தொடங்கியதுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து சேர்க்கை பெற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழி முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எவ்வகையிலும் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்ப தற்போது முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேற்படி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப் படுவார்கள்.

இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.