பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 

Continues below advertisement

ஊதியம் இல்லாத மே மாதம் 

கடந்த பதிமூன்று ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.

தொடர் கோரிக்கை 

இந்நிலையில் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். மேலும் தற்போது நடந்து முடிந்த திமுக ஆட்சியில் கடைசி முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அதில் தங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், கல்வி மானிய கோரிக்கைலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினோ, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.

Continues below advertisement

 

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தை கைவிட்டு, அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய இன்னும் ஒரு 300 கோடி போதும். இதற்கு முதல்வர் அரசு கொள்கை முடிவு எடுத்தால் போதும். தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை எனவும், இதனை அறிவிக்கும் வரை தாங்கள் பல்வேறு கட்ட தொடர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

சுதந்திர தின அறிவிப்பாக அமைச்சரவையின் தேர்தல் வாக்குறுதி 181 நிறைவேற்றும் வகையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

 

இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

தமிழக அமைச்சரவை கூட்டம் சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஆகஸ்ட் 14 -ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார். இம்முறை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181 -ல் கூறியபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றார்கள். எனவே, சுதந்திர தின அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் அறிவிக்க வேண்டும்.

மறுக்கப்பட்ட சலுகைகள் 

நீண்ட காலமாக தற்காலிகமாக வேலை செய்து வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம், வருங்கால வைப்பு தொகை, பண்டிகை முன்பணம் உள்பட எதுவுமே இல்லை என்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள். தற்போதைய ரூ.12,500 என்ற குறைந்த தொகுப்பூதியத்தில் வீட்டு வாடகை, மருத்துவ செலவு, குழந்தைகள் படிப்பு, பண்டிகை கால செலவு, சுபகாரிய செலவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளைகூட செய்து கொள்ள முடியாமல் கடன், வட்டி என மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

 

‌எனவே, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் குடும்பங்களின் கஷ்டத்தை போக்க சுதந்திர தின அறிவிப்பாக முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் அறிவிக்க வரும் 14-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியுள்ளார்.