இந்தியாவின் முக்கிய பள்ளிக் கல்வி அமைப்புகளான தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கை தீவிர கவலை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

NCERT-ல் 1,596 பணியிடங்கள்காலி

பிடிஐ  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மதிப்பீட்டுக் குழுவின் 2026-27ஆம் ஆண்டு அறிக்கையில், NCERT-ல் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை காலியாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2025 நிலவரப்படி, மொத்தம் அனுமதிக்கப்பட்ட 2,844 பணியிடங்களில் 1,248 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 1,596 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 916 நிர்வாகப் பணியாளர்கள், 404 துணைப் பணியாளர்கள், 145 கல்விசார் பணியிடங்கள் மற்றும் 131 பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அடங்கும்.

Continues below advertisement

இந்தப் பற்றாக்குறையானது, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐச் செயல்படுத்துதல், புதிய பாடத்திட்டங்கள் மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற NCERT-இன் முக்கியப் பணிகளை நேரடியாகப் பாதிக்கும் எனக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

CBSE-ல் 44 %பணியிடங்கள்காலி

இதேபோல், சிபிஎஸ்இ வாரியத்திலும் 44 சதவீத பணியாளர் பற்றாக்குறை உள்ளது. அனுமதிக்கப்பட்ட 2,117 இடங்களில் 933 இடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக குரூப் சி ஆதரவுப் பணியாளர் பிரிவில் 595 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அன்றாடப் பணிகளுக்காக சிபிஎஸ்இ தற்போது தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையே அதிக அளவில் நம்பியுள்ளது.

குழுவின்எச்சரிக்கையும்பரிந்துரையும்

தேசிய அளவிலான பொதுத்தேர்வு தொடர்பான முக்கியப் பணிகளுக்குத் தற்காலிக ஊழியர்களைப் பயன்படுத்துவது, தேர்வின் பாதுகாப்பு, தரம் மற்றும் சீரான செயல்பாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என நாடாளுமன்றக் குழு கடுமையாக எச்சரித்துள்ளது. தன்னாட்சி அமைப்பான சிபிஎஸ்இ, ஒப்பந்தத் தொழிலாளர்களை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், விரைவான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய பணி நியமனங்களைத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

1992- 93ல் 3,787 ஆக இருந்த சிபிஎஸ்இ இணைவு பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25ல் 31,234 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 25 மண்டல மற்றும் 5 துணை மண்டல அலுவலகங்கள் மூலம் இவை நிர்வகிக்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில், 12-ஆம் வகுப்பில் 1.70 மில்லியன் மற்றும் 10-ஆம் வகுப்பில் 23.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது இந்தப் பணியாளர் பற்றாக்குறை மிகவும் ஆபத்தானது.

இந்த இரண்டு உயரிய கல்வி நிறுவனங்களின் ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பாதுகாக்க, கல்வி அமைச்சகத்தின் அவசரத் தலையீடு மற்றும் விரைவான பணி நியமனங்கள் மிகவும் அவசியம் எனக் குழு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.