பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும்.


இந்த ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களில்,  பணியமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், காலி இடங்கள் அதிகமாக உள்ள நிலையில், அவை நிரப்பப்பட உள்ளன. 


போட்டித் தேர்வு மூலம் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட உள்ளனர். 
இந்த நிலையில் இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி உள்ளதாவது:


காலியாக உள்ள மாவட்டங்களுக்கு பணி நிரவல்


'' ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால்‌ அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்‌ 500க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல்‌ செய்யப்பட வேண்டும்‌. அவ்வாறு பணிநிரவல்‌ செய்யப்பட்ட விவரத்தை, பணிநிரவல்‌ முடிவுற்ற 15 தினங்களுக்குள்‌ அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்‌.


பிரதி ஆண்டு ஜூன்‌ 1ம்‌ தேதியன்று உள்ளவாறு ஆசிரியர்‌ பணியிடங்களைக் கணக்கில்‌ கொண்டு அதே ஆண்டு ஜூன்‌ 30-க்குள்‌ பணிநிரவலை முடித்து ஜூலை 1ஆம்‌ நாளன்று காலிப்பணியிட மதிப்பீட்டினை அரசு அனுமதிக்கு அனுப்ப வேண்டும்‌.


தற்போது பட்டதாரி ஆசிரியர்‌ 2000 பணியிடங்களை நிரப்பிக்‌ கொள்ள அனுமதிக்கப்பட்டதில்‌ தேர்வாகும்‌ தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ அதிகமாக காலியாக உள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும்‌ தருமபுரி மாவட்டங்களில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌.


குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ பணி


முன்னுரிமை மாவட்டங்களில்‌ தேர்வர்களை முதலில்‌ நியமனம்‌ செய்யும்‌ போதே குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ இம்மாவட்டங்களில்‌ பணிபுரிய வேண்டும்‌ எனும்‌ நிபந்தனையை நியமன ஆணையில்‌ குறிப்பிட்டு நியமனம்‌
செய்யப்பட வேண்டும்‌.


ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறுதல்‌ குறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணிநிரவல்‌ நடைமுறை பின்பற்றப்பட்ட பின்னரே ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.


மேற்காணும்‌ அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர்‌ மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.


757 பட்டதாரி ஆசிரியர்‌ காலி பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்பக் கோரப்பட்ட அனுமதி தற்போது வழங்கப்பட முடியாத சூழல் உள்ளது.''


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். 


பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள், வட மாவட்டப் பள்ளிகளில் அதிக அளவு காலியாக உள்ளது நினைவுகூரத் தக்கது.