யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் அறிவித்த 'சமத்துவ விதிமுறைகள் 2026' (UGC Equity Regulations 2026) குறித்து பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

Continues below advertisement

யுஜிசி கொண்டு வந்துள்ள சமத்துவ விதிகள், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிரானவை என்றும் பொய்ப் புகார் கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை இல்லை என்றும் நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு இந்து அமைப்புகள், மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, "புதிய விதிகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலுமே செயல்படுத்தப்படுகின்றன.

Continues below advertisement

இந்தச் சட்டத்தின் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. இந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும், யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது என்றும் நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

புகார்களைத் தெரிவிக்க தெளிவான வழிமுறைகள் இல்லை

இருப்பினும், இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'சவர்ண சேனா' என்ற அமைப்பின் தலைமையில் பொதுப்பிரிவு மாணவர்கள் யுஜிசி தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய விதிமுறைகளில் பொதுப்பிரிவு மாணவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க தெளிவான வழிமுறைகள் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு தொடர்பான புகார்கள் 2016-17ஆம் ஆண்டில் 173 ஆக இருந்தது, 2023-24ஆம் ஆண்டில் 350-க்கும் மேலாக அதிகரித்துள்ளதாகத் தரவுகளைச் சுட்டிக்காட்டி அவர்கள் கவலை தெரிவித்தனர்.

எதற்காக புதிய விதிகள்?

ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோர் உயர் கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான துன்புறுத்தல்களால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களது தாயார்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) இந்த விதிமுறைகளை ஆதரித்தாலும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் இதில் இல்லை எனவும், பாகுபாடு குறித்த வரையறைகள் தெளிவாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தொடர் எதிர்ப்புகள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பொதுப்பிரிவு மாணவர்களின் புகார்களையும் விசாரித்துத் தீர்வு காண்பதற்கான புதிய அம்சத்தை விதிகளில் சேர்க்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இதுதொடர்பான வழக்கை, விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.