தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பப் படிவத்தைப் பெற இன்றே (டிசம்பர் 15) கடைசித் தேதி என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:
2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2026 ஜனவரி மாதம் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க டிசம்பர் 20 கடைசி
இந்தத் தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.12.2025 முதல் 15.12.2025 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025. கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
தேர்வர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1765535192.pdf என்ற இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம்.
மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.