நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு தாமதாமான நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வர்கள், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் 12 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 12-ல் கலந்தாய்வு முடிவுகள் வெளியாகின.

முதல் சுற்றுக் கலந்தாய்வு முக்கியத் தேதிகள்

தேர்வர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான / ரிப்போர்ட் செய்வதற்காக 6 நாட்கள் அவகாசத்தைக் கொடுத்துள்ளது. இது ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி உள்ளது. தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மாணவர்கள், மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் mcc.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

முதல் சுற்றுக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் அல்லது தனக்கான இடத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

பின்வரும் தேர்வர்களுக்கு புதிய பதிவு தேவையில்லை

  • முதல் சுற்றுக் கலந்தாய்வில் பதிவு செய்து, ஒரு இடத்தைக் கூடப் பெறாதவர்கள்.
  • சரிபார்ப்பின் போது அவர்களின் முதல் சுற்று இடம் ரத்து செய்யப்பட்டிருந்தால்.
  • மேம்படுத்தலுக்குத் தேர்வுசெய்திருந்தால்.
  • ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதில் சேரவில்லை.
  • ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் இடத்தை விட்டுக்கொடுத்திருந்தால் (Surrendered)

கலந்தாய்வு நடைமுறைகள் தெரியுமா?

  • முன்பதிவு (Register) - முழு கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களை உள்ளிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
  • சாய்ஸ் ஃபில்லிங், லாக்கிங்- தேவையான கல்லூரி/ பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்து லாக் செய்வது
  • இட ஒதுக்கீடு- நீட் தரவரிசை, விருப்பத்தேர்வுகள் மற்றும் இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.
  • முடிவு அறிவிப்பு - MCC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும்.
  • கல்லூரிக்கு நேரில் செல்வது - அசல் ஆவணங்கள் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இந்த நடைமுறைகளைப் பின்பற்றியே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.