Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Question Paper Leak: நீட் தேர்வு வினாத்தாளை ரூ.10 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியும், 720க்கு 107 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

Neet Question Paper Leak: பொதுதேர்வில் மகன் சுமாரான மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், பெற்றோர் மருத்துவ பேராசையும் லட்சங்களை கொட்டி நீட் வினாத்தாளை விலைக்கு வாங்கியுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்:
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையானது, ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தை தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான தினேஷ் & மங்கிலால் மற்றும் மங்கிலாலின் மூத்த மகன் விகாஸ் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீட் வினாத்தாளுடன் கிட்டத்தட்ட முழுமையாக ஒத்துப்போகும் வகையிலான ஒரு மாதிரி வினாத்தாளைப் பெற்று, அதை பயிற்சி மையங்களுக்கு வழங்கியுள்ளனர். அங்கிருந்து அது மேலும் பலருக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
720-க்கு 107 மதிப்பெண்கள் - ரூ.10 லட்சம்
தேர்வுக்கு முன்பே கசிந்த வினாத்தாளை பெற்றதாக கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் பிவாலின் மகன் ரிஷி பிவாலையும் சிபிஐ தேடி வருகிறது. முன்கூட்டியே வினாத்தாள் கிடைத்தும் கூட ரிஷி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, தினேஷ் பிவால் தனது மகனுக்காக வினாத்தாளைப் பெறுவதற்கு சிகாரில் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அப்படி முன்கூட்டியே அணுகல் கிடைத்தும் ரிஷி நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 107 மதிப்பெண்களை மட்டுமே பெற்றதாக கூறப்படுகிறது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது தினேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோரின் மருத்துவ பேராசை:
விசாரணையை முடுக்கிவிட்டதில், ரிஷி பொதுத்தேர்வுகளில் மிகவும் சுமாரான மதிப்பெண்களையே பெற்றது அம்பலமாகியுள்ளது. 10ம் வகுப்பில் வெறும் 44 சதவிகித மதிப்பெண்களையும், 12ம் வகுப்பில் இரண்டாம் நிலையிலும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற அவருக்குக் கருணை மதிப்பெண்கள் தேவைப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அதன்படி, பாடவாரியாக இந்தியில் 32, ஆங்கிலத்தில் 51, இயற்பியலில் 51, வேதியியலில் 58 மற்றும் உயிரியலில் 62 என 500-க்கு 254 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார். மருத்துவ படிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் சுமாரான மதிப்பெண்களையே வாங்கியுள்ளார். அப்படியிருந்தும், அந்தக் குடும்பத்தினர் ரிஷியை மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்தியுள்ளனர். ஒரு வேளை அந்த மாணவனின் உண்மையான ஆசை என்ன என்பதை பெற்றோர் கேட்டு அறிந்து செயல்பட்டு இருந்தால், இன்று அந்த குடும்பம் இந்த மோசமான நிலையை எட்டி இருக்காது என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மோசடி
தினேஷ் மற்றும் மங்கிலால் குடும்பத்தைச் சேர்ந்த விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று வெவ்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். விகாஸ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவிகித மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற நிலையில், நீட் தேர்வில் 86 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளார். விகாஸிஸ் உறவினரான பாலக் நீட் தேர்வில் 98.61 சதவிகித மதிப்பெண்களையும், பிரகதி 89 சதவிகித மதிப்பெண்களையும், ஷான்யா 94.07 சதவிகித மதிப்பெண்களையும், குஞ்சன் 92.53 சதவிகித மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இவர்களில் பலரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். பொதுத்தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களை பெற்றபோதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நீட் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டும் வினாத்தாள் கசிவு நடைபெற்றதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்குவிடப்பட்டுள்ளது. இவர்கள் வரிசையில் தான் ரிஷி மற்றும் ஆமன் எனும் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரையும், இந்த வருட நீட் தேர்வில் தினேஷ் மற்றும் மங்கிலால் ஆகியோர் பங்கேற்கச் செய்துள்ளனர்.
கண்காணிப்பில் 150 மாணவர்கள்:
சிகாரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் வினாத்தாள்களை விநியோகிப்பதற்கும் வேட்பாளர்களுடனான தொடர்புகளை நிர்வகிப்பதற்கும் ஒரு ஒருங்கிணைப்பு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நெட்வொரிக்கின் சில உறுப்பினர்கள், கசிந்த வினாத்தாள்களை வேட்பாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் ஏஜெண்டுகளாக செயல்பட்டுள்ளனர். தினேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் இந்த பணிகளை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க்குடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 150 மாணவர்களை சிபிஐ அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















