சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக "நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.

Continues below advertisement

என்ன இது?

அரசுப் பள்ளிகளை நீர் மேலாண்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தழுவும் திறன் (Climate Resilience) மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முன்னோடி வளாகங்களாக மாற்றும் நோக்கில், "நீர் எழில் பள்ளி" (Neer Ezhil Pall) என்ற புதிய முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் பள்ளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 'நீர் சமநிலை' (Water Balance) திட்டத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலிலும், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் (TNGCC) ஆதரவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் எளிதில் பின்பற்றக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய ஒரு மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

Continues below advertisement

கழிவுநீர் சுத்திகரிப்பு

இத்திட்டத்தின் கீழ், இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions NbS) மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25,000 லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இதன் மூலம் பசுமையான பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டல், பல்லுயிர் பெருக்கம், நகர்ப்புற வெப்பத் தணிப்பு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவை மேம்படும்.

வழக்கமான இயந்திர அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, இந்த இயற்கை சார்ந்த அமைப்புகள் மண், தாவரங்கள் மற்றும் இயற்கை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை பயன்படுத்தி கழிவுநீரைச் சுத்திகரிக்கின்றன. இதன் மூலம் நீர் சமநிலை மீட்டெடுக்கப்படுவதோடு. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றன.

இந்தத் திட்டத்திற்கு மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும் எஸ்.ஐ.வி இம்பாக்ட் (SIV Impact) ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ப்ளூ-கிரீன் என்விரோ ஃபவுண்டேஷன் (BlueGreen Enviro Foundation). சென்னை ரெசிலியன்ஸ் சென்டர் (Chennal Reellence Centre CRC) மற்றும் கேர் எர்த் டிரஸ்ட் (Care Earth Trust - CET) ஆகிய அமைப்புகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றன.

பலகட்ட சுத்திகரிப்பு

முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக மேலும் பத்து அரசுப் பள்ளிகளிலும் இயற்கை சார்ந்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான மூலதனச் செலவு (CAPEX) முழுமையாக வழங்கப்படுகிறது. மேலும், இவ்வமைப்புகள் நீண்டகாலம் செயல்திறனுடன் இயங்குவதை உறுதிசெய்ய, பத்து ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவிற்கான (OPEX) ஆதரவும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, விரிவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation - M&E) கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நீர் மீள்திறன், சுற்றுச்சூழல், சமூக மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள் அறிவியல் அடிப்படையில் தொடர்ந்து மதிப்பிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள், திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மற்றும் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.

நேரடி பங்களிப்பு

"நீர் எழில் பள்ளி" திட்டம், நீர் பாதுகாப்பு, காலநிலைத் தழுவல், நகர்ப்புற மீள்திறன், வெப்பத் தணிப்பு, இயற்கை சார்ந்த தீர்வுகள், நிலையான பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது. அதேவேளையில், பசுமை முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தும் ஒரு செயல்திறன் மிக்க மாதிரியாகவும் இது அமைகிறது.

அரசுப் பள்ளிகளை சுற்றுச்சூழல் புத்தாக்க மையங்களாக மாற்றும் முயற்சியில் "நீர் எழில் பள்ளி" திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, காலநிலை மீள்திறனை உருவாக்கி, பல்லுயிர் வளத்தைப் பெருக்குவதோடு. மாணவர்களுக்கு நிலைத்தன்மை குறித்த செயல்வழிக் கற்றலையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்களுக்கு, குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடிய, அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, விரிவுபடுத்தக்கூடிய இயற்கை சார்ந்த தீர்வாக இந்த முன்னெடுப்பு விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றக்கூடிய முன்னோடி மாதிரியாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பசுமைப் பள்ளிகள் குறித்த தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை நடைமுறையில் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக "நீர் எழில் பள்ளி" திட்டம் அமைவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.