1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வெளியிட்டுள்ளது. அதேவேளையில், 9ஆம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை வரவிருக்கும் கல்வியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மற்றும் புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இவை உருவாக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான மாற்றங்கள்

புதிய பாடத்திட்டத்தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அச்சு மற்றும் டிஜிட்டல் ஆகிய இரு வடிவங்களிலும் தற்போது மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. மனப்பாடம் செய்யும் முறையை முற்றிலும் தவிர்த்து, செயல்முறை மற்றும் ஆக்டிவிட்டி அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கும் வகையில் இவை மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

குறிப்பாக, கலைக் கல்வி மற்றும் தொழில் திறன் கல்வி ஆகியவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் சந்திரயான் திட்டம், கோவிட் தடுப்பூசி உருவாக்கம், ஆயுர்வேதம் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற நவீனத் தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் செழுமையான கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில், புத்தகங்களுக்கு 'சந்தூர்', 'வீணை', 'மிருதங்கம்' போன்ற பாரம்பரியப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம்

இதற்கிடையே 9-ஆம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் தற்போது தீவிரத் தயாரிப்பு நிலையில் உள்ளன. இந்தியாவின் மரபுசார் அறிவு முறைகளை மையமாகக் கொண்ட இதன் வரைவுப் பாடத்திட்டம், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளுக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2026- 2027ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தப் புதிய புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.

அதேபோல, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2027- 2028 கல்வியாண்டிலும், 12ஆம் வகுப்புக்கான புத்தகங்கள் அதன்பிறகும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே, இந்த வகுப்புகளுக்குத் தற்போதைய பழைய பாடப்புத்தகங்களே இப்போதைக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என என்.சி.இ.ஆர்.டி அறிவுறுத்தியுள்ளது.

விலை குறையும் புத்தகங்கள்

பாடப்புத்தகங்களின் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி நிறுவனம் ஆண்டுக்கு 15 கோடி புத்தகங்களை அச்சிடுகிறது. அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் அச்சிடப்படுவதால், பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமை ஏற்படாதவாறு பல வகுப்புகளுக்கான புத்தகங்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நவீனத் திறன்கள் மற்றும் இந்தியப் பாரம்பரியத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பாடப்புத்தகங்கள், இந்தியப் பள்ளிக் கல்வியில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.