மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது, தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகிய ஆசிரியர்கள் இருவருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான விருது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விருது பெறும் ஆசிரியர் தங்கராஜ் ஏபிபி நாடு கூறும்போது,
- மாணவர் வளர்ச்சிக்காக
- கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம்.
- மாணவர்களின் கற்றலை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற Storytelling, Games, Art Integrated Learning, Activity Based Learning போன்ற முறைகளைப் பயன்படுத்தினேன்.
- தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த தொடர்ந்து செயல்பட்டேன்.
- மாணவர்களின் தன்னம்பிக்கை, பேச்சுத்திறன், படைப்பாற்றல் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டேன்.
- யோகா, சிலம்பம், கபடி, கோ-கோ, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் இணைப்புச் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தினேன்.
- டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேலும் சுவாரஸ்யமாக மாற்றினேன்.
- பள்ளிக் கட்டமைப்புக்காக
- மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்க பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்தேன்.
- வகுப்பறைகளுக்கு Smart TV, Projector, Interactive Board உள்ளிட்ட டிஜிட்டல் கற்றல் வசதிகளை ஏற்படுத்தினேன்.
- மாணவர்களுக்கு தேவையான மேசைகள், நாற்காலிகள், பாய்கள், Green Boards மற்றும் கல்வி உபகரணங்களை சமூகத்தின் உதவியுடன் பெற்றுத் தந்தேன்.
- பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை அழகுபடுத்தும் பணிகளையும் மேற்கொண்டேன்.
- மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடல் வளர்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுத் தந்தேன்.
- மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கழிப்பறை வசதி ஏற்படுத்துவதற்காக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை பெற்றேன்.
- சமூக பங்களிப்பு
- பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்தேன்.
- பல்வேறு நன்கொடையாளர்களின் உதவியைப் பெற்று பள்ளிக்குத் தேவையான வசதிகளை உருவாக்கினேன்.
- பள்ளி என்பது ஆசிரியரின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்பதை நடைமுறையில் உருவாக்க முயற்சி செய்தேன்.
- மாணவர்களுக்கான எனது உறுதி
- எந்த மாணவரும் வறுமையின் காரணமாக கல்வியில் பின்தங்கக் கூடாது.
- ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- கல்வியுடன் ஒழுக்கம், தன்னம்பிக்கை, திறமை மற்றும் சமூகப் பொறுப்பும் வளர வேண்டும்.
- கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது தொடர்ந்த இலக்கு.
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்ததன் நோக்கம்
“இந்த விருதைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் நான் இந்தப் பணிகளைச் செய்யவில்லை. நான் பணியாற்றும் கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி மூலம் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அந்தப் பணிக்கான ஒரு அங்கீகாரமாக இந்த தேசிய நல்லாசிரியர் விருதை நான் பார்க்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து!
விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ’’மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது. இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!’’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
