தன்னாட்சிக் கல்லூரிகளில் மாதிரிப் பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 


2023- 24ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் 100 ஒரே மாதிரியான பாடத்திட்டமும் மற்ற பாடங்களில் 75 ஒரே மாதிரியான‌ பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று அண்மையில் உயர் கல்வித்துறை அறிவித்தது.


மீதமுள்ள 25 சதவீத பாடத்திட்டங்களை வேண்டுமெனில் பல்கலைக்கழகங்களே மாற்றிக்கொள்ளலாம் என்று முன்பே முடிவெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டது. துணை வேந்தர்களும் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக உயர் கல்விதுறை தெரிவித்தது.  முதல்வர் ஆலோசனையின்பேரில், கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


எனினும் இதற்குத் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், தன்னாட்சிக் கல்லூரிகளில் மாதிரிப் பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, மாதிரி
பாடத்திட்டங்கள் (Model Syllabus) உருவாக்கப்பட்டன. 


மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. 


70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறை


இந்நிலையில், மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித் துறை அமைச்சரின் தலைமையில் 02.08.2023 அன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.


சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப (Optional) முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’.


இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.