பள்ளிக்கல்வித்துறையில் பதற்றத்தில் செய்த தப்பை மூடி மறைக்க அதிகாரிகளை முன்னாள் அமைச்சர்கள் தரப்பு கைகாட்டுகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் அவரிடம், பள்ளிக்கல்வித்துறையில் தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் பல விஷயங்கள் வெளிப்பட்டன. கடந்த கால ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் தான் பிரச்னை இருந்தது. அமைச்சர்கள் தரப்பில் இல்லை என சொல்லப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “பழிக்குப்பழி என்பது நமது அரசியல் இல்லை. அதையெல்லாம் தாண்டி வந்து விட்டோம். உண்மையிலேயே பிரச்னை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு துறையிலும் தனியாக ஒரு சிண்டிகேட் போட்டு ஊழல் செய்துக் கொண்டே இருப்பார்கள். பள்ளிக்கல்வித்துறையில் நிறைய ஓட்டைகள் இருந்தது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பித்தல் நடைமுறை இருந்தது. அதை வாங்கி தருகிறேன் என ஒரு சிண்டிகேட் செயல்பட்டது. திருச்சி, தி.நகரில் எல்லாம் தனியாகவே லஞ்சம் வாங்க ஆபீஸ் செயல்பட்டது. இதற்காக ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை ஒவ்வொரு பள்ளியும் செயல்பட்டால் அதனை எப்படி ஈடுகட்டுவார்கள்?
மாணவர்களின் தலையில் தான் எல்லாம் முடியும். விதவிதமான கட்டணம் விதிப்பார்கள். அதேபோல் நான் வாழ்நாள் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருகிறேன் என ஒரு டீம் வேலை பார்த்தார்கள். பள்ளிக்கு எப்படி வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க முடியும். சினிமா தியேட்டரே ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல் சான்றிதழ் பெற வேண்டும். அங்கு உட்கட்டமைப்பு சரியில்லை என்றால் காட்சிகள் ஓட்ட முடியாது. அதிலும் கட்டடம் ஒழுங்காக இருக்கிறதா, தீ விபத்து தடுப்பு முறை இருக்கிறதா என பல ஆய்வுகள் நடைபெறும். அப்படியிருக்கும்போது பள்ளிகளுக்கு எப்படி தர முடியும்?.. கும்பகோணம் தீ விபத்தை நம்மால் மறக்க முடியுமா?.. அதில் தப்பித்த ஒரு குழந்தை ஆட்சியருக்கு இணையான பதவிக்கு வந்துள்ளார்.
அவரை அதிகாரிகளுக்கு கைகாட்டி விட்டு இன்னொரு சம்பவம் அப்படி நடந்து விடக்கூடாது என்பதால் தான் நான் சான்றிதழ் தர மறுக்கிறேன் என கூற அவர்கள் அனைவரும் ஆடிப்போய் விட்டார்கள். இந்த முடிவை எடுக்க 2 நாட்கள் ஆய்வு செய்தோம். பல நூறு கோடி புழங்கிய இடத்தில் செயல்பட்ட அந்த சிண்டிகேட் சும்மா இருக்குமா?.. வாழ்நாள் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருகிறேன் என கடந்த திமுக ஆட்சியில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டது. இதில் பல நூறு கோடி பணம் புழங்கியது. பதற்றத்தில் செய்த தப்பை மூடி மறைக்க அதிகாரிகளை அமைச்சர்கள் தரப்பு கைகாட்டுகிறது. யார் செய்தாலும் தப்பு தான்.
Also Read: CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என சொல்கிறேன். அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்கள் என சொன்னேன். இடைத்தரகர்கள் என்ற ஒன்றே வேண்டாம். பணம் கொடுத்தவர்கள் சட்ட ரீதியாக அதனை எதிர்கொள்ளட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
