தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்தார். தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.




பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலகத்தை பார்வையிட வந்தேன். 105 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளதை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. 100 ஆண்டுகளை கடந்துள்ள பள்ளிகளுக்கு என்று தமிழ்நாடு முதல்வர் ரூ.25 கோடி தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.




தயான்சந்த் பயிற்சி தந்த பள்ளி:


நான் பார்த்த பள்ளிகளிலேயே மிகப்பெரிய அளவு வளாகம் கொண்டது கோவில்பட்டி பள்ளி தான். இங்கு ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் தயான் சந்த் வந்து தங்கி இருந்து பயிற்சி அளித்துள்ளார் என்பது பெருமை வாய்ந்த விஷயம். அடுத்த ஆண்டில் 100 ஆண்டுகளைக் கடந்த பள்ளிகள் பட்டியலில் இந்த பள்ளியையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் மழைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது என்று கூறியுள்ளனர். அதனையும் இங்குள்ள திறந்தவெளி கலையரங்கத்தையும் அடுத்த ஆண்டு சீர் செய்யப்படும்.




எத்தனை ஆசிரியர் சங்கங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் தலைவர் நான்தான். எங்களுடைய ஆசிரியர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அவர்களை எப்படி பக்குவப்படுத்தி வேலை வாங்குவது என்றும் தெரியும். NCERT பாட திட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று போட்டு உள்ளார்கள். அது குறித்த தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்க பெறவில்லை. மாநில கல்விக் கொள்கை என்று நமக்கு உருவாக்கி உள்ளோம் நம்முடைய பண்பாடு ,கலாச்சாரம் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு என்ன தேவையோ நாமே முடிவு செய்து கொள்வோம் என்பதற்கு ஆக தான் கமிட்டி அமைக்கப்பட்டு அதற்கான முடிவுகள் வந்து கொண்டு இருக்கிறது இறுதி அறிக்கை வந்த பிறகு முதல்வர் இடம் தெரிவிப்போம்.




சுய மதிப்பீடு:


எங்கள் துறையைப் பொறுத்தவரை நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை தெரிந்து கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். எங்களுடைய பள்ளி மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை திட்டமாக தீட்ட முடியும். நாங்களே எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்வது போல் ஆகும். அதனால் பல நேரங்களில் எங்களை நாங்களே சுய மதிப்பீடு செய்து கொள்வோம். எங்கள் அலுவலர்கள் ஒரு விஷயத்தை மூன்று முறை உறுதி செய்த பின்னர் தான் எங்களிடம் கூறுவார்கள்.


பழைய காலம் போல் கிடையாது. ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான் முறையாக பதில் வணங்குகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்கள்தான். தமிழ்நாட்டில் சுமார் 31,000 பள்ளிகளில் 17.5 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் பயன்பெறுகின்றனர். இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக நீதிமன்றம் கூறியுள்ளது தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்.




கடலை மிட்டாய்:


தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது. சத்துணவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சேர்ப்பது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமாக 32 வாக்குறுதிகள் உள்ளன. இதில் 29 வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தி விட்டோம்.


ஆசிரியர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக தான் நாங்கள் பார்க்கிறோம். கண்டிப்பாக நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் படிப்படியாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 2012 13 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது, மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வரவுள்ளது. 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்