எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 12ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். மாணவர்கள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார். 


கால அவகாசம் நீட்டிப்பு


எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில்,  மாணவர்கள் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் https://tnmedicalselection.net/  மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பிக்கக் கால அவகாசம்  ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 12ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருடன் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அல்லது அரசு சேவை மையங்களுக்கு (Tamil Nadu Facilitation Centre) அனைத்து அசல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரிகளுடன் உதவியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. 


அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


32 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பம்


அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 22,500, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 9,500 என மொத்தம் 32,000 பேர் விண்ணப்பித்தனர். மேலும் மாணவர்கள் சான்றிதழ் வாங்க கால தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிக்க இரண்டு நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர். இதனால் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி என்பது, 2 நாள் கூடுதலாக்கி ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 
ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு


ஜூலை 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.  


விண்ணப்பக் கட்டணம்


டிசம்பர் 2023-க்குள் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, சமர்ப்பிக்க வேண்டும். 


சிறப்புப் பிரிவினரில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் மாற்றுத் திறனாளிகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் நேரடியாகவும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வேண்டும்.