மதி ஃபவுண்டேஷனின் அடிப்படை கற்றலை மையமாகக் கொண்ட முதன்மை கருத்தரங்கான “கல்வி குரல் - செழிப்பான இந்தியாவுக்கான தொடக்கக் கல்வி உரையாடல்கள்” கருத்தரங்கு இன்று (ஆக.22) சென்னையில் நடைபெற்றது.
இதில் கல்வித் தலைவர்கள், அரசு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் செயல்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
என்னென்ன விவாதம்?
இன்றைய தொடக்கக் கல்வியை வடிவமைக்கும் முக்கியமான கேள்விகளை ஆராய்வதற்கான இடத்தை இந்த கருத்தரங்கு உருவாக்கியது. வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி வரம்புகள், அளவீடு மற்றும் மதிப்பீடு, சமூகப் பங்கேற்பு, ஆசிரியர் வழிகாட்டுதல் மற்றும் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான பள்ளியை வடிவமைப்பதில் அவர்களின் பங்கு ஆகியவை இதில் விவாதிக்கப்பட்டன.
தொடக்க உரையில் Pooja Kulkarni, IAS, தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம். அடிப்படை கற்றலை காலவரையறுக்கப்பட்ட ஒரு திட்டமாகப் பார்ப்பதைத் தாண்டி, பள்ளிகளின் அன்றாட செயல்பாட்டின் மையமாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிறப்புரையாற்றிய இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) தலைவர் தேவராஜன், கல்வியை மனித மேம்பாடு, பொறுப்பு மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்துடன் இணைத்து, தொழில் மற்றும் தலைமைத்துவக் கண்ணோட்டத்தை உரையாடலுக்குக் கொண்டுவந்தார்.
அவர் பேசும்போது, “நான் தமிழ்வழிப் பள்ளியில்தான் படித்தேன்; கல்விக்கு வாழ்க்கையை மாற்றும் சக்தி இருப்பதை நான் அறிவேன். ஒவ்வொரு குழந்தையின் மன, உடல் மற்றும் உளவியல் தேவைகளுக்கும் நமது கல்வி அமைப்பு பதிலளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
கல்வி குரலின் நோக்கம்
மதி ஃபவுண்டேஷன் நிறுவனர் மெர்லியா கூறும்போது, “ஒரு குழந்தையின் கற்றலை வடிவமைக்கும் பல்வேறு தரப்பினரை ஒன்றிணைத்து, அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்வதே கல்வி குரலின் நோக்கம்.
ஒரே ஒரு பங்குதாரரால் மட்டும் அடிப்படை கற்றலை வலுப்படுத்த முடியாது. நாம் கேட்கவும், நமது முன்னெண்ணங்களை கேள்விக்குட்படுத்தவும், ஒன்றிணைந்து செயல்படவும் வேண்டும். ‘காடுகளில் இருந்து விதைகள் வரை’ என்ற கருப்பொருளின் மூலம், கல்வியின் பெரிய கேள்விகளில் இருந்து குழந்தைகளும் ஆசிரியர்களும் தினமும் அனுபவிக்கும் நிஜங்களுக்குச் செல்ல விரும்பினோம்.
இங்கு தொடங்கிய உரையாடல்கள் இந்த நிகழ்வைத் தாண்டியும் தொடர்ந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அர்த்தமுள்ள, நிலையான செயல்பாடுகளாக மாற வேண்டும் என்பதே எங்களின் நம்பிக்கை.
2026 கருப்பொருள்
“காடுகளிலிருந்து விதைகள் வரை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கல்வி குரல் 2026, அடிப்படை கற்றலை வடிவமைக்கும் பெரிய கட்டமைப்பு சக்திகளிலிருந்து பள்ளிகள், வகுப்பறைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் அன்றாட நிஜங்களுக்குச் செல்ல உதவும் என்று தெரிவித்தார்.
