அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் ஆசிரியர்கள் நியமனத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நடப்பாண்டு முதல் இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டின் முதல் செமஸ்டரில் தமிழர் மரபு என்ற பாடமும், இரண்டாவது செமஸ்டரில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 


இதைக் கற்பிக்க பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை தமிழ் இலக்கியத்தில் உரிய தகுதி பெற்ற ஆசிரியர் போதும்; இல்லாவிட்டால், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படித்த பொறியியல்/ தொழில்நுட்பம்/ அறிவியல் மற்றும் மானுடவியல் பேராசிரியர்களும் தமிழ்ப்பாடத்தை நடத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.  அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதற்கு  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப் பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர். 


இந்நிலையில், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் ஆசிரியர்கள் நியமனத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 




இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:


’’தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.


பொறியியல் படிப்புகளில்  தமிழ்ப் பாடத்தை தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அண்ணா பல்கலை. அறிவித்திருந்தது.  அது கூடாது; தமிழ்ப் பாடத்திற்கு தனியாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். அதை  அரசு ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.


அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவது போதுமானதல்ல. அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை கற்பிக்க தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்திற்கான பாட வேளைகளை அதிகரிக்கவும்,  அடுத்த ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டின் இரு பருவங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும்  தமிழ்நாடு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.’’


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.