கடந்த வாரம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கையில் எம்பி ஒதுக்கீடு தொடர வேண்டுமா அல்லது ரத்து செய்யப்பட வேண்டுமா என்பதை கூட்டாக விவாதித்து முடிவெடுக்குமாறு மக்களவையில் வலியுறுத்தினார். அவரது முறையீட்டைத் தொடர்ந்து, மக்களவைச்  சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டலாம் என்று பரிந்துரைத்தார்.


எம்.பி ஒதுக்கீடு என்றால் என்ன, அதை ரத்து செய்ய அரசு ஏன் ஆர்வம் காட்டுகிறது.. அதற்கு முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


சிக்கலைப் புரிந்து கொள்ள, கேந்திரிய வித்யாலயாக்கள் (KV) என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு 'மத்திய பள்ளிகள்' என்று அழைக்கப்பட்ட இவை கல்வி அமைச்சகத்தால் (MoE) நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள். பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் உட்பட மாற்றத்தக்க மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக இரண்டாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1963ல் இது தொடங்கப்பட்டது. பெற்றோரை அடிக்கடி இடமாற்றம் செய்வதால் இந்த குழந்தைகளின் கல்வி தடைபடாமல் பார்த்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். தற்போது, ​​நாட்டில் சுமார் 1,200 கேந்திரிய வித்யாலயா உள்ளன. இந்தப் பள்ளிகள் மானிய விலையில் தரமான கல்வியை வழங்குவதாலும், குறிப்பாக சிபிஎஸ்இ வாரியத்தின் முடிவுகளில் சிறந்த கல்வித் தொடர்ச்சியைப் பராமரித்திருப்பதாலும், இங்கே தங்களது பிள்ளையை சேர்ப்பதை அனைத்து பெற்றோரும் விரும்புகிறார்கள். 


பள்ளிகளை நிர்வகிக்கும் கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சேர்க்கைக்கான ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை அனுமதிக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை 1975ல் அறிமுகப்படுத்தியது. எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கு அவர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க இது ஒரு வழியாகும்.


இந்த ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு எம்.பி மாணவர்களை சேர்க்கைக்கு பரிந்துரைக்கலாம், ஆனால் இந்த பரிந்துரைகள் 1 முதல் 9 வகுப்புகள் வரை வரையறுக்கப்பட்டுள்ளன, மேலும் உறுப்பினர்களின் தொகுதியைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படும். இந்த ஒதுக்கீடு குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில் நிறுத்தப்பட்டு  பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. முன்னதாக, ஒரு எம்.பி., ஒரு கல்வியாண்டில் இரண்டு மாணவர்களைச் சேர்க்கைக்கு பரிந்துரை செய்யலாம், இது 2011ல் ஐந்து, 2012ல் ஆறு, 2016ல் 10 என அதிகரிக்கப்பட்டது. தற்போது, ​​லோக்சபாவில் 543 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 245 எம்.பி.க்களும் உள்ளதால், 7,880 பேருக்கான சேர்க்கை சாத்தியமாகி உள்ளது.


ஒவ்வொரு எம்.பி.யும், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற குழந்தை மற்றும் பெற்றோரின் விவரங்களுடன் சங்கதன் மற்றும் கல்வித்துறைக்கு அவரது அலுவலகத்திலிருந்து ஒரு கூப்பனாக அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் சங்கதன் இணையதளத்தில் வெளியிடப்படும். பட்டியலில் ஒரு மாணவரின் பெயர் தோன்றிய பிறகு, முறையான சேர்க்கை செயல்முறை தொடங்குகிறது. மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ பிறப்புச் சான்றிதழ்கள், முகவரிச் சான்றுகள், இடமாற்றச் சான்றிதழ்கள் போன்ற பிற தொடர்புடைய ஆவணங்களுடன் கூப்பனின் பிரிண்ட்-அவுட்டை எடுத்து பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணச் சலான், செலுத்தப்பட்டவுடன், மாணவர் முறையாகப் பள்ளியில் சேர்க்கப்படுவார்.


பல ஆண்டுகளாக, எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பல கோரிக்கைகளைப் பெறுவதால், சேர்க்கைகள் பெரும்பாலும் ஒதுக்கீட்டின் அளவைத் தாண்டிவிட்டன, அவற்றில் பலவற்றை நிராகரிப்பது கடினம் என்று அவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, 2018-19 ஆம் ஆண்டில், அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 7,880-க்கு எதிராக 8,164 மாணவர்களும், கல்வி அமைச்சரின் 450 இடங்களுக்கு எதிராக 9,402 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகப்படியான மாணவர் சேர்க்கை இந்த பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை சிதைக்கிறது என்று வாதம் எழுந்தது. 


மார்ச் 2010 இல், UPA அரசாங்கத்தின் கீழ், அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இரண்டு ஒதுக்கீடுகளையும் நிறுத்தி வைத்தார். இருப்பினும், அவரும் அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது, மேலும் அவர் எம்பி ஒதுக்கீட்டை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல், 2011 மற்றும் 2012ல் அதன் அளவையும் அதிகரித்தார்.


இருப்பினும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்கும் வரை கல்வி அமைச்சரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2016ம் ஆண்டில் MP ஒதுக்கீட்டின் அளவை ஆறில் இருந்து பத்தாக உயர்த்தியது. ஆகஸ்ட் 2021ல், தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது வசம் உள்ள 450 சேர்க்கைகளை ரத்து செய்தார்.


நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி இந்த விவகாரத்தை எழுப்பியதை அடுத்து, எம்.பி.க்களின் இந்த விருப்புரிமை அதிகாரம் அவை கவனத்தின் கீழ் வந்தது. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நிராகரித்து பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு எம்.பி.க்கு பத்து சீட்டு போதாது என்று திவாரி வாதிட்டார்.


தர்மேந்திர பிரதான், சபை ஒப்புக்கொண்டால், ஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசாங்கம் செயல்படலாம் என்று பரிந்துரைத்தார். “நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். நாங்கள் ஒரு சிலரின் பிரதிநிதிகள் அல்ல” என்று அவர் கூறினார்.