தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.
2025- 26ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2022- 23ஆம் ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்குக் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
எவ்விதக் கட்டணமும் இல்லை
1, 2 ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன போட்டிகள்?
இந்த ஆண்டு 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன. கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.
முதல்கட்டமாக, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து, குறுவட்ட அளவில் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை நடக்க உள்ளன. வட்டார அளவில் அக். 13 முதல் 17 வரையும் மாவட்ட அளவில் அக்.27 முதல் 31 வரையும் நடக்கின்றன. மாநில அளவில் நவம்பர் 24 முதல் 28ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலையரசன், கலையரசி விருதுகள்
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் தரவரிசையில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.