அரசுப் பள்ளிகளில் மாநில அளவிலான கலைத் திருவிழாவை வரும் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


கலைத்திருவிழா:


தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 


நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


போட்டிகள்:


முதற்கட்டமாக பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 




மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 


இந்நிலையில் மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி 3 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 27 முதல் 30ஆம் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.