கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்னும் திமுக குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் மத்தியக் கல்வி இணை அமைச்சரின் பதிலைக் குறிப்பிட்டுள்ளார்.
கே.வி. பள்ளிகளில் ஏன் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை?
மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை என்று திமுக கூறி வரும் நிலையில் அதுகுறித்து மக்களவையில் மத்தியக் கல்வி இணை அமைச்சர் அளித்த பதிலை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ’’திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மக்களவையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏன் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை? இதற்கு எதாவது காரணம் உள்ளதா? 86 நிரந்தர இந்தி ஆசிரியர்களும் 65 நிரந்தர சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளது எப்படி?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்தியக் கல்வி இணை அமைச்சர், ’’மத்திய கே.வி. பள்ளிகளில் இந்தி மற்றும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக உள்ளது. இந்த நிலையில் மொழிப் பாடங்களைக் கற்பிக்க இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
31 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து பெற்ற தகவலின்படி, தமிழ் விர்ச்சுவல் அகாடமி மூலம் கே.வி. பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 46 பள்ளிகளில் 40 பள்ளிகளில் இவ்வாறு தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் ஒப்பந்த அடிப்படையில் 31 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்’’ என்று தெரிவித்து இருந்தார்.
இதை மேற்கோள் காட்டிய அண்ணாமலை, ’’திமுக ஐடி விங்கின் முழு நேர வேலையே போலியான, சரிபார்க்கப்படாத, அதிகாரப்பூர்வம் இல்லாத செய்திகளை வெளியிடுவதுதான். திமுகவின் செய்தி ஊடகமும், ஐடி விங்கின் நீட்சியாகவே செயல்படுகிறது.
கே.வி. பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியே சென்னையில் பள்ளி நடத்தி வருகிறார். அதில், தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை, விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது’’ என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.
