தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்து காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு வலிமையான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

Continues below advertisement

தேர்தல் வாக்குறுதியும், 14 ஆண்டு கால துயரமும்

2021 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 181-வது வாக்குறுதியாக, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி முதல்வரின் அறிவிப்புக்காக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

"கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, 14 ஆண்டுகள் கல்விப் பணியில் அனுபவம் பெற்றிருந்தும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு 5000 ஊதியத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது மாதம் ரூ.12,500 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதை நம்பி வாழும் 12,000 ஆசிரியர்களின் குடும்பங்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றன. 

Continues below advertisement

வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகள்

பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் பல அடிப்படை உரிமைகளை இழந்து வருகின்றனர். இவர்களுக்கு:

* இதுவரை மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

* பண்டிகை போனஸ் வழங்கப்படவில்லை.

* அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் EPF (வருங்கால வைப்பு நிதி) மற்றும் ESI (மருத்துவ காப்பீடு) உள்ளிட்ட எந்தவிதமான அரசு சலுகைகளும் வழங்கப்படவில்லை.

மிகக் குறைந்த வருமானத்தில், வாழ்வாதாரப் பாதுகாப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்களின் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மனதளவில் அவர்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரம்

தற்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் பாடவாரியான எண்ணிக்கை பின்வருமாறு:

உடற்கல்வி - 3,700 

ஓவியம் - 3,700 

கணினி அறிவியல் - 2,000 

தையல் - 1,700

இசை - 300 

தோட்டக்கலை - 20

கட்டிடக்கலை - 60 

வாழ்க்கை கல்வி - 200

மொத்தம் - 12,000 

பணி நிரந்தரம் ஏன் அவசியம்?

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்போது, அவர்கள் சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

* சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது Pay Band Level 10-ன் படி ரூ.20,600 என்ற அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பணி நிரந்தரம் செய்யப்பட்டால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியமாக கிட்டத்தட்ட ரூ.30,000 வரை ஊதியம் கிடைக்கும். அத்துடன் அனைத்து அரசு சலுகைகளும் கிடைக்கும்.

"முந்தைய அரசுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பல ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்த அரசாணைகளும், முன் உதாரணங்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" எனவும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளுக்கும் கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்பது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்திய கோரிக்கைதான். எனவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் தாக்கல் செய்து பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மேலும், இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் பணிப்பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., கொ.ம.தே.க., த.வா.க., ம.ம.க. ஆகிய கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி, பா.ஜ.க., பா.ம.க., புரட்சி பாரதம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் செந்தில்குமார் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல லட்சம் மாணவர்களின் கல்விக்காகவும், 14 ஆண்டு கல்விப்பணி அனுபவத்திற்காகவும், 12,000 ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் முதல்வர் ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.