சிஏ இடைநிலைத் தேர்வு முறையில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 2026 முதல் ஆண்டுக்கு இருமுறை இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏ பயிலும் மாணவர்களுக்கு இரண்டு மிக முக்கியமான அறிவிப்புகளை ஐசிஏஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புகள் நாடு முழுவதும் உள்ள சி.ஏ. மாணவர்களுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளன.
என்னென்ன மாற்றங்கள்?
முதலாவதாக, சி.ஏ. இடைநிலை (CA Intermediate) தேர்வுகளின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களுக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்வுகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மே3ஆம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள், 5ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இதற்கான புதிய தேர்வு அட்டவணையை ஐசிஏஐ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் எந்தவித குழப்பமும் இன்றி புதிய தேதிகளைச் சரிபார்த்து, அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிஏ இறுதித் தேர்வுகளில் முக்கிய மாற்றம்
இரண்டாவதாக, மாணவர்களின் நலன் கருதி சிஏ இறுதித் தேர்வுகளில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மே மாதம் முதல், சிஏ இறுதித் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு 3 முறை சிஏ இறுதித் தேர்வு நடைபெற்று வந்தது. எனினும் தேர்வு பங்குதாரர்களின் கருத்துகளின் அடிப்படையில் தேர்வு 2 முறை நடக்க உள்ளது. இனி ஆண்டுதோறும் மே, நவம்பர் மாதங்களில் சிஏ இறுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக சி.ஏ கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
