சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் தேர்வை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ. (ICAI) இணையதளத்தில் தரவுகள் கசிந்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ஐ.சி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய சி.ஏ. இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள ஒரு புதிய சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விடைத்தாள்களைத் திருத்தும் பிரத்யேக ஐ.சி.ஏ.ஐ இணையதளத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், முக்கியத் தரவுகள் கசிந்துள்ளதாகவும் எக்ஸ் பயனர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
சில நாட்களாக எழுந்துள்ள பிரச்சினை
கடந்த சில நாட்களாகவே சி.ஏ. தேர்வெழுதிய மாணவர்களும், இத்துறையைச் சேர்ந்த கணக்கீட்டு நிபுணர்களும் இது தொடர்பான பல ஸ்கிரீன்ஷாட்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தப் பதிவில், விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் லாகின் விவரங்கள், மாணவர்களின் விடைத் தாள்களை திருத்துவதற்கான ரகசிய வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியத் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய ஊடுருவல் சம்பவம் உண்மையெனில், ஒட்டுமொத்த சி.ஏ தேர்வு மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மை முற்றிலுமாகக் கேள்விக்குறியாகும்.
இந்தியாவிலேயே கடினமான தேர்வு
இந்தியாவிலேயே மிகவும் கடினமான தொழில்முறைத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் சி.ஏ தேர்வை, மாணவர்கள் பல ஆண்டுகள் இரவு பகலாகப் படித்து எழுதுகிறார்கள். இந்நிலையில், இதுபோன்ற இணையதளப் பாதுகாப்பு மீறல் செய்திகள் தங்களின் கடின உழைப்பை வீணாக்கும் வகையில் அமைந்திருப்பதாக மாணவர் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்ற அச்சமும் தேர்வர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இருப்பினும், இந்த இணையதள ஊடுருவல் மற்றும் தரவு கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.சி.ஏ.ஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்போ அல்லது மறுப்போ இதுவரை முழுமையாக வெளியாகவில்லை. சி.ஏ தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள சூழ்நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.
