கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுரைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

Continues below advertisement

தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. மேலும் பருவ நிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

எனவே, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

Continues below advertisement

என்ன செய்ய வேண்டும்?

  1. அதிக வெய்யில் உள்ள நேரங்களில் குறிப்பாக பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நேரடி வெய்யில் படும் திறந்தவெளியினை பயன்படுத்துவதைத் தவிர்த்திடல் வேண்டும். இந்நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் அல்லது விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்தவெளியில் நடத்துதல் கூடாது.
  2. மாணவ / மாணவியர் தண்ணீர் தேவையான அளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  3. ஒவ்வொரு பாடவேளை துவக்கத்தின்போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
  4. மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் குடிநீர் அல்லது பள்ளியில் பயன்பாட்டில் உள்ள குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும்.
  5. பயணத்தின் போதும் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
  6. ஓ.ஆர்.எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர். லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.
  7. அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக நீர் சத்து அதிகம் நிறைந்த பழ வகைகளான தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு பழம், திராட்சை, அன்னாசி, வெள்ளரி, கீரைகள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம்.      
  8. பள்ளியில் தேவையான ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
  9. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவித்தல் வேண்டும்.
  10. மரங்களில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பறவைகளுக்கான நீர் கொள்கலன்களை அமைத்து பறவைகள் நீர் அருந்துவதற்கான சூழலை உருவாக்கித் தரலாம்.
  11. மாணவர்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளான (உ.ம்) சதுரங்கம். கேரம் போன்ற விளையாட்டுகளை மட்டும் விளையாட வாய்ப்பளிக்கலாம்.
  12. மாணவர்கள் வெயிலில் செல்லும் போது குடையை பயன்படுத்திட அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.