கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பட்டதாரிகளுக்கு ஒரு சிறப்பான நற்செய்தி! மத்திய அரசின் முன்னணித் துறைகளில் நேரடிப் பணி அனுபவத்தைப் பெறுவதற்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி கற்கும்போதே ஊதியத்துடன் அரசுத்துறையின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
எங்கெங்கே?
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய தகவலியல் மைய சேவைகள் நிறுவனம் (NICSI) ஆகிய முக்கியத் துறைகளில் இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
யாரெல்லாம்விண்ணப்பிக்கலாம்?
பொறியியல், கணினி அறிவியல், சட்டம், பொதுக் கொள்கை, மேலாண்மை மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கலை, அறிவியல் பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- NHAI: இதில் சிவில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு, திட்ட மேலாண்மை குறித்த கள அனுபவம் கிடைக்கும்.
- MeitY & NICSI: டிஜிட்டல் இந்தியா திட்டங்கள், இ-கவர்னன்ஸ், சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கொள்கைகள் குறித்த நேரடிப் பயிற்சியை இங்கு பெற முடியும்.
பயிற்சிகாலம்மற்றும்ஊக்கத்தொகை
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கால அளவு மாணவர்களின் வசதி மற்றும் துறைத் தேவைகளுக்கு ஏற்ப 2 மாதங்கள் முதல் அதிகபட்சம் ஒரு வருடம் வரை மாறுபட்டு இருக்கும். பொதுவாக மே முதல் ஜூலை 2026 வரை இன்டர்ன்ஷிப் இருக்கும் என்றும் இதற்கு மாதம் ரூ.20 ஆயிரம் பயிற்சித் தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மர், குளிர்காலப் பயிற்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊக்கத் தொகையும், பயிற்சி முடித்ததற்கான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழும் வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு இந்தச் சான்றிதழ் பெரிதும் கைகொடுக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் (NHAI, MeitY, NICSI) அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய முகவரி
NHAI - https://internshipsatnhai.digitalindiacorporation.in/register
MeitY, NICSI - nicsi.nic.in/nicsi/internship
விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
