டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் 559 அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 9491 ஆக உயர்ந்துள்ளது. இதமூலம் குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 


 


குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 


ஜூன் மாதம் நடந்த தேர்வு


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌-4 நேரடி நியமனத்திற்காக 30.04.2024 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான எழுத்துத்‌ தேர்வு 09.06.2024 முற்பகல்‌ நடைபெற்றது. இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுதினர்.


இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம்‌ இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள்‌ தங்களது தரவரிசை மற்றும்‌ மதிப்பெண்களை தேர்வாணையத்தின்‌ இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும்‌ www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்‌.


தரவரிசைப் பட்டியல் வெளியீடு


தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளில்‌ வெளிப்படைத்‌ தன்மையினை உறுதிசெய்யும்‌ பொருட்டு தேர்வர்கள்‌ இத்தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, அவர்களின்‌ ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும்‌ சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.


தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்‌, உரிமைக் கோரல்கள்‌ மற்றும்‌ நியமன ஒதுக்கீட்டு விதிகளின்‌ அடிப்படையில்‌, தேர்வாணையத்தால்‌ நிர்ணயிக்கப்படும்‌ விகிதத்தில்‌, தேர்வர்கள்‌ சான்றிதழ்‌ சரிபார்க்கும்‌ நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்‌.


தேர்வு செய்யப்பட்டோருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்‌


சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின்‌ பட்டியல்‌ விரைவில்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வழியாக மட்டுமே விவரங்கள்‌ தெரிவிக்கப்படும்‌. அஞ்சல்‌ / கடிதம்‌ வழியாக தகவல்கள்‌ ஏதும்‌ அனுப்பப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


தேர்வு முடிந்து 92 வேலை நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது தேர்வர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி உள்ளது.