டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுக்காகத் தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.


அரசுப் பணி என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அதை அடையப் பலரும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களே நடத்தி வருகின்றன.


இந்த நிலையில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படுகிறது.


யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள்?


பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பந்தப்பட்டவர்கள் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.


எங்கே வகுப்புகள்?


பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை, ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளன. 


மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.


விண்ணப்பிப்பது எப்படி?


தேர்வர்கள்  https://admission.cecc.in/register என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


பெயர், ஆதார் எண், மொபைல் எண், இ - மெயில் முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.


 Register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொண்டு விண்ணப்பிக்கலாம். 


இதற்கு https://admission.cecc.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


எப்போது விண்ணப்பிக்கலாம்?


பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 12.02.2024 கடைசித் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.


இ - மெயில் முகவரி: ceccchennai@gmail.com,  ceccpresidency@gmail.com


பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும், மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.cecc.in/coaching-exam என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.