அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவிகள்‌ புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌ குறித்தும் கிராமப் புறங்களில்‌ உள்ள அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ முதலமைச்சரின்‌ காலைச்‌ சிற்றுண்டி திட்டம்‌ விரிவாக்கம்‌ குறித்தும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ பரிசீலிக்கப்படும்‌ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது:


’’அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ (ஹை டெக் Labs), வானவில்‌ மன்றம்‌, தேன்‌ சிட்டு மலர்‌, கலைத் திருவிழா போன்ற திட்டங்கள்‌ படிப்படியாக செயல்படுத்துவது குறித்து சாதகமாகப்‌ பரிசீலிக்கப்படும்‌.


புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌


அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவிகள்‌ புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌ குறித்து நிதி நிலை அறிக்கையில்‌ நல்ல செய்தி வெளிவரும்‌.


கிராமப் புறங்களில்‌ உள்ள அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ முதலமைச்சரின்‌காலைச்‌ சிற்றுண்டி திட்டம்‌ விரிவாக்கம்‌ குறித்து வரும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ சாதகமாக பரிசீலிக்கப்படும்‌.


அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌பள்ளிகளில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர்‌நிர்ணயம்‌, பணி நியமனங்களுக்கு ஒப்புதல்‌ அளித்தல்‌, பணியிட மாற்றங்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும்‌.


உச்ச வயது வரம்பு


பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ அனைத்து வகையான ஆசிரியர்கள்‌ நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும்‌, இதரப் பிரிவினருக்கு 58 எனவும்‌ நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளுக்கும்‌ விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள்‌ ஆராயப்படும்‌.


சிறுபான்மையினரின்‌ கல்லூரி ஆசிரியர்‌ பணியிடங்களில்‌, யு.ஜி.சி. மற்றும்‌ அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அரசால்‌ மூன்று மாத காலத்திற்குள்‌ நியமன அங்கீகாரம்‌ அளிக்கப்படும்‌.


மாநில்‌ அரசால்‌ கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்‌ மதசார்பு சிறுபான்மையினர்‌ அந்தஸ்து சான்றிதழ்‌ தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ்‌ காலம்‌ குறிப்பிடப்படாமல்‌ நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.


பிரத்யேக இணையதளம்


சமூகநலத்‌ துறை, ஆதி திராவிடர்‌ நலத்‌ துறை, மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்‌ துறை ஆகிய துறைகளின்‌ கீழ்‌ உதவி பெறும்‌, அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப்‌ பதிவு செய்தல்‌, உரிமங்களைப்‌ புதுப்பித்தல்‌, நிதியுதவி  மற்றும்‌ மானியங்களைப்‌ பெறுவதற்கான நடைமுறைகள்‌ஆகியவை எளிமைப்படுத்தப்படும்‌. இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌’’.


இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.