புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் சின்ன காலாப்பட்டில் அமைந்துள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் (Pondicherry University), போலி சான்றிதழைச் சமர்ப்பித்து முதுகலை படிப்பில் சேர முயன்ற கேரள மாணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Continues below advertisement

போலிச் சான்றிதழ் மூலம் சேர முயற்சி

புதுச்சேரி மாநிலம் சின்ன காலாப்பட்டில் அமைந்துள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் (Pondicherry University), போலி சான்றிதழைச் சமர்ப்பித்து முதுகலை படிப்பில் சேர முயன்ற கேரள மாணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்பிற்கு (Post Graduate) கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சித்தீக் என்ற மாணவர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இவர் தனது விண்ணப்பத்துடன், இளங்கலை வணிகவியல் (B.Com) பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் ஒன்றையும் இணைத்திருந்தார்.

Continues below advertisement

சந்தேகம் எழுந்து சிக்கியது எப்படி?

மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு, மாணவர் சித்தீக் சமர்ப்பித்திருந்த தனியார் கல்லூரியின் பி.காம் சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக, அந்தச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் ஆய்வுக்கு அனுப்பியபோது, அந்தச் சான்றிதழ் முற்றிலும் போலியானது என்பது உறுதியானது.

மோசடிப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழக அதிகாரி வம்சீதர ரெட்டி காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மாணவர் சித்தீக் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீசார் தற்போது மாணவர் சித்தீக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போலிச் சான்றிதழை அவர் யாரிடம் பெற்றார்? இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய கும்பல் செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இதேபோன்று போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து வேறு யாராவது பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனரா? என்பது குறித்தும் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசார் ரகசியத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முறைகேடுச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனி வரும் காலங்களில் மாணவர் சேர்க்கையின்போது ஆவணங்கள் சரிபார்ப்பு (Document Verification) முறையை மேலும் தீவிரப்படுத்தப் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.