நீட், ஜேஇஇ, க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நாட்டின் அதிமுக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்திவரும் தேசியத் தேர்வு முகமை வெறும் 24 நிரந்தரப் பணியாளர்களுடன் மட்டுமே இயங்கி வருவதாகவும், மீதமுள்ள 15 முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும் மத்திய அரசு மாநிலங்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் ஜேஇஇ, க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாகத் தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏதான் நடத்தி வருகிறது.

கல்வித்துறையின் இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தேசியத் தேர்வு முகமைக்காக அரசு மொத்தம் 39 நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 24 நிரந்தர ஊழியர்கள் ஆனால், தற்போது அங்கு 24 நிரந்தர ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Continues below advertisement

ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

இந்த ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பிற அரசுத் துறைகளில் இருந்து மாற்றுப் பணியில் வரும் அதிகாரிகளையும், ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்படும் ஊழியர்களையும் கொண்டு என்டிஏ தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக 73 ஒப்பந்தப் பணியாளர்களும் 124 அவுட்சோர்ஸிங் பணியாளர்களும் வேலையில் உள்ளனர். ஒப்பந்தப் பணியாளர்களில், பொது மேலாளர் (தகவல் தொடர்பு), ஒரு மூத்த ஆலோசகர், மூன்று ஆலோசகர்கள், ஐந்து மூத்த ஆலோசகர்கள், 44 ஆலோசகர்கள், ஒரு மூத்த மென்பொருள் உருவாக்குநர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் 17 இளம் தொழில் வல்லுநர்கள் உள்ளனர்.

அவுட்சோர்ஸிங் பணியாளர் குழுவில் தரவுப் பகுப்பாய்வாளர்கள், ஆலோசகர்கள், இளநிலை ஆலோசகர்கள், சட்ட உதவியாளர்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றோர் உள்ளனர்.

நிரந்தரப் பணியாளர்கள் தவிர்த்து, பாடத்திட்ட வல்லுநர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களையும் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பணிகளுக்காக என்.டி.ஏ அவ்வப்போது நியமித்துக் கொள்கிறது. வினாத்தாள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு போன்ற முக்கியப் பணிகளுக்குத் தனி நிபுணர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்வு நடத்தும் மையங்கள், சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் பிற தளவாடத் தேவைகளுக்கு மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை என்.டி.ஏ முழுமையாக நம்பியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான தேர்வு முறைகேடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் வலுத்து வரும் வேளையில், இவ்வளவு பெரிய பொறுப்பைக் கையாளும் ஒரு முக்கிய அமைப்பில், நிரந்தரப் பணியாளர்கள் வெறும் 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்ற தகவல் மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.