மாணவர்களுக்கு கலைத்திருவிழா

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு அறிவிப்புகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதி வண்டி, கல்வி உதவித்தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் கலை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டியிலும் சிறந்து விளங்கிடும் வகையில் போட்டிகளானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவ, மாணவிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கலைத்திருவிழா தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கலைத்திருவிழாவில் மாணவர்கள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தி தங்களை நிரூபிக்க வாய்ப்பானது உருவாக்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழாவின் நோக்கமாகும் மேலும் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

 எந்தெந்த மாணவர்கள்- தேதி எப்போது.?

அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Continues below advertisement

எத்தனை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.?

இதில், தோராயமாக 2200 அரசு பள்ளி மாணவர்களும், 2000 அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலைத்திருவிழா நடத்தப்படும் இதில் வெற்றி பெறும் மாணவ,மாணவிகளுக்கு விருதும், வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்கும் அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.