மிக்ஜாம்‌ புயலால்‌ ஏற்பட்ட பாதிப்பினை முன்னிட்டு மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ 09.12.2023 அன்று நடைபெற திட்டமிருந்த மறியல்‌ போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், மழை வெள்ளத்தால் நிலைகுலைந்து போயின.


இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


இதற்கிடையே தமிழ்நாடு ஆசிரியர்‌ முன்னேற்ற சங்க உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ தங்களின்‌ ஒரு நாள்‌ ஊதியத்தினை வழங்க உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர்‌ முன்னேற்ற சங்க மாநில தலைவர்‌ தியாகராஜன்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இந்த நிலையில், மிக்ஜாம்‌ புயலால்‌ ஏற்பட்ட பாதிப்பினை முன்னிட்டு மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ 09.12.2023 அன்று நடைபெற திட்டமிருந்த மறியல்‌ போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.


இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறி உள்ளதாவது:


தமிழகத்தின்‌ நான்கு மாவட்டங்களில்‌ (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவள்ளுர்‌) மிக்ஜாம்‌ புயலின்‌ கோரத்‌ தாண்டவத்தினால்‌உருக்குலைந்துள்ளது. தமிழ்நாடு அரசு நிவாரணப்‌ பணிகளில்‌ முழு வீச்சில்‌ ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களின்‌ துயரைப் போக்கும்‌ நடவடிக்கையில்‌ ஈடுபட்டுள்ளளது. இந்த நிவாரணப்‌ பணிகளில்‌ ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- பணியாளர்கள்‌ பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்‌ நிவாரணப்‌ பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.


உயர்மட்டக்குழு அமைப்பு நிர்வாகிகள்‌ கோரிக்கை


இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்‌, தமிழ்நாடு அரசின்‌ நிவாரணப்‌பணிகளுக்கு நாம்‌ தோளோடு தோள்‌ நிற்பதோடு மட்டுமல்லாமல்‌, ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கை களை தமிழக அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு சேர்த்து நிறைவேற்றும்‌ முயற்சியாக, எதிர்வரும்‌ 09.12.2023 அன்று மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ திட்டமிட்டிருந்த மறியல்‌ போராட்டத்தினை ஒத்தி வைக்குமாறு பெரும்பான்மையான ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு அமைப்புகளின்‌ நிர்வாகிகள்‌ கோரிக்கைகள்‌ வைத்தனர்‌.


பெரும்பான்மையாக கருத்தின்‌ அடிப்படையிலும்‌ கள யதார்த்தத்தின்‌ அடிப்படையிலும்‌ எதிர்வரும்‌ 09.12.2023 அன்று மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ திட்டமிட்டிருந்த மறியல்‌ போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.


விரைவில் புதிய தேதி அறிவிப்பு


விரைவில்‌ ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ மற்றும்‌ உயர்மட்டக் குழுக்‌ கூட்டம்‌ நடத்தப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்ட இயக்க நடவடிக்கைகளை நடத்துவதற்கான தேதியினை இறுதி செய்து, விரைவில்‌ ஜாக்டோ ஜியோ அதற்கான அறிவிப்பினை வெளியிடும்‌ என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.