சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடைபெற்ற மாபெரும் சைபர் தாக்குதல் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்புப் பணிகளுக்காக திறக்கப்பட்ட புதிய போர்ட்டலில், வெறும் இரண்டு நிமிடங்களில் சுமார் பதினைந்து லட்சம் முறை சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையில் ஓஎஸ்எம் எனப்படும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டதில், குளறுபடிகள் எழுந்துள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் காணும் பணி, மறு மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை இன்று (ஜூன் 2) தொடங்கின.

ஆதார் கட்டாயம்

மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவர்கள் தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட அதிமுக்கிய விவரங்களை உள்ளீடு செய்து போர்ட்டலில் உள்நுழைய வேண்டும் என சிபிஎஸ்இ ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

Continues below advertisement

இந்நிலையில், போர்ட்டல் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஹேக்கர்கள் இந்தத் தளத்தை முடக்கும் நோக்கத்தோடு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான போலி கோரிக்கைகளை அனுப்பி, சர்வரை செயலிழக்கச் செய்யும் ‘டிடாஸ்’ (DoS- denial of service) வகையான இணையத் தாக்குதலை மிகத் தீவிரமாக நடத்தியுள்ளனர்.

2 நிமிடங்களுக்குள் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்

சரியாக 2 நிமிடங்களுக்குள் 15 லட்சம் ஊடுருவல் முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்ததால், இணையதளத்தின் வேகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இணைய போர்ட்டல் தற்காலிகமாக முடங்கியது. ஆதார் தகவல்கள் திருடப்பட்டிருக்குமோ என்று விண்ணப்பித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

உடனடியாகச் சுதாரித்த சிபிஎஸ்இ தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தேசிய தகவலியல் மையத்தின் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்  துரிதமாகச் செயல்பட்டு, இந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தனர். மேலும், இந்த ஊடுருவல் முயற்சிகள் அனைத்தும் வெளிநாட்டு ஐபி முகவரிகளில் இருந்து திட்டமிட்டு வந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் வலுவாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் முறையான புகாரும் உடனடியாக அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான நிலையில் தரவுகள் 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ உயர் அதிகாரிகள், "மாணவர்களின் தரவுகள் அனைத்தும் எங்கள் சர்வரில் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. ஹேக்கர்களால் எவ்விதத் தகவலையும் திருட முடியவில்லை. இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகள் உடனடியாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வித அச்சமுமின்றி தொடர்ந்து தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்" என்று உறுதியளித்துள்ளனர். கல்வி சார்ந்த அரசு இணையதளங்கள் மீது இதுபோன்ற மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல்கள் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.