மத்திய அரசின் கீழ் நாடு முழுவதும் இயங்கும் பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நூற்றுக்கணக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளிள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) நடத்தப்பட்டு வருகிறது. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 


தேர்வு எப்போது?


இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலப்பு முறையில் நாளுக்கு 2 அல்லது 3 ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன.


அவகாசம் நீட்டிப்பு


நாடு முழுவதும் 13 மொழிகளில் 26 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 380 நகரங்களில் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்.26ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 26 இரவு 9.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டு, ஏப்ரல் 5ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்துத் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://cuet.nta.nic.in/about-department/introduction/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


* அதில், CUET UG 2024 Registration என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/