மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET - UG தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்நிலையில் க்யூட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. 


மொத்தம் 13 மொழிகளில் 10 நகரங்களில் சுமார் 9,68,201 பேர் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 4,29,228 பெண்களும், 5,38,965 ஆண்களும் தேர்வை எழுதியிருந்தனர். இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இந்த முடிவுகள் அனைத்தும் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பித்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மேலும் தொடர்பு கொண்டு இது தொடர்பான விவரங்களை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியானது. ஜூலை மாதத்தில் தொடங்கிய தேர்வு, ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 6 பகுதிகளாக நடைபெற்று முடிந்தது. 


 



 


இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தியது. இந்தத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தச் சூழலில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து 90 பல்கலைக்கழகங்கள், 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. சியுஎட் (CUET) நுழைவுத் தேர்வு தொடர்பான முடிவுகளை பார்க்க 


தேசிய தேர்வு முகமை: nta.ac.in


க்யூட் வலைதளம்: cuet.samarth.ac.in