CUET PG Exam 2024: மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும்  பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் முதுகலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை.


தேர்வு எப்போது?


இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில்  2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) மார்ச் மாதம் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனினும் தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 


இந்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 24 கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆகும். மாணவர்கள் இரவு 11.50 வரை இணையம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எனினும் மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். 



தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 


* CUET registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது https://pgcuet.samarth.ac.in/index.php/app/registration/instructions என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.


* அதில், பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும். 


* முன்பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 


* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 


* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும். 


முன்னதாக ஜனவரி 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்தது. எனினும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிப்ரவரி 2 முதல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். மார்ச்4ஆம் தேதி தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்த தகவல்கள் வெளியிடப்படும். அதேபோல மார்ச் 7ஆம் தேதி நுழைவுச் சீட்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு மையங்கள்


கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. கடந்த முறை, நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த முறை இதைவிடக் கூடுதலாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


கூடுதல் தகவல்களுக்கு: https://nta.ac.inhttps://pgcuet.samarth.ac.in


தொடர்புகொள்ள: 011 4075 9000


இ- மெயில் முகவரி: cuet-pg@nta.ac.in