தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கியது. இந்தத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Continues below advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 159 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 509 பள்ளிகளை சேர்ந்த 18,861 மாணவர்கள் மற்றும் 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 1,237 தனித்தேர்வர்களும் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை

Continues below advertisement

தேர்வுகள் சீராக நடைபெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்க 11 பாதுகாப்பு மையங்களில் 22 அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேர்வு நாள்களில் 47 வழித்தடங்கள் மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. தேர்வு மையங்களில் ஒழுங்காக தேர்வு நடைபெற 159 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளர்கள், 250 நிலையான மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், 316 அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 946 ஆசிரியர்கள் (ஸ்கிரைப்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் நடைபெற்று வரும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொதுத்தேர்வை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கோவை மாவட்டத்தில் உள்ள சிலிண்டர் ஏஜென்சி நிர்வாகிகளுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், தற்போது மாவட்டத்தில் உடனடி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்றும் கூறினார். தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தகைய நிலை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய மாணவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அனைத்து பள்ளிகளிலும் சமையல் அறைகள் மற்றும் வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.