தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 'அப்பா' என்ற பெயரில் புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கடலூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழா இன்று நடைபெற்று வருகிறது. 7ஆவது மண்டல மாநாடாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். விழா மலரும் இதில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். இதில் அப்பா என்ற பெயரில் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். APPA (Anaithu Palli Parents teachers Association) என்ற பெயரில் இந்த செயலி இயங்க உள்ளது.
அப்பா செயலி
மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய செயலியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொடிய வரலாறாக மாறிவிடக் கூடாது
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’ஒன்றிய அரசு நம்மைப் பாராட்டினாலும் நிதி தர மறுக்கிறது. ஒரு நிலத்தை கைப்பற்ற நினைத்தால், அதன் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளி மொழியை, அழிக்க வேண்டும் என்பார்கள். அது தமிழகத்தின் கொடிய வரலாறாக மாறிவிடக் கூடாது என்றுதான் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
சமஸ்கிருத வளர்ச்சிக்கு 1,488 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அந்த மொழியைப் பேசுவோர் சில ஆயிரம் பேர்தான். இந்தி பேசும் மாநிலங்களில் சுமார் 25 மொழிகள் அழிந்துள்ளன. தமிழ்நாடு, தன் தாய்மொழியான தமிழைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடுகிறது’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.